ரவிராஜ் படுகொலை சூத்திரதாரியை கைது செய்ய சுவிசின் உதவியை நாடுகிறது சிறிலங்கா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை குறித்து விசாரித்து வரும் சிறிலங்கா காவல்துறை, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது.
ரவிராஜ் படுகொலையின் முக்கிய சந்தேக நபரான சேரன் என்பவரை சிறிலங்கா காவல்துறை தேடி வருகிறது. இவர் சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று சுவிற்சர்லாந்தில் வசித்து வருகிறார்.
இவர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரால் வழங்கப்பட்டது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இராணுவ அதிகாரி, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்த இராணுவ அதிகாரி, வழங்கியுள்ள தகவலின் படி, பிள்ளையானிடம் கொடுக்கப்பட்ட அந்த துப்பாக்கி, அவர் மூலம் சேரனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரவிராஜ் படுகொலை தொடர்பாக, இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் அரசதரப்பு சாட்சிகளாக மாற ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்றும் சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.