விசாரணையில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை என்கிறார் சம்பிக்க ரணவக்க
கலப்பு நீதிமன்ற முறைமையில் எவ்வாறான அனைத்துலக உதவிகளை பெறுவது என்பதை சிறிலங்கா அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும், இதில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கலப்பு நீதிமன்ற முறைமையில் சிறிலங்காவின் சுயாதீன செயற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் அனைத்துலக விசாரணையே பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஒரு தரப்பினர் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த கலப்பு நீதிமன்ற விசாரணை முறைமை அனைத்துலக கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறும் என்ற கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர்.
ஆனால் இந்த கலப்பு நீதிமன்ற முறைமை அனைத்துலக விசாரணை அல்ல.
அதேபோல் இந்த விசாரணைகளின் போது அனைத்துலக உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனூடாக ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளையே குறிப்பிட்டுள்ளனர்.
அதைத் தவிர வேறு எந்தவித அனைத்துலக தலையீடுகளும் இந்த விசாரணைகளின் போது இருக்காது.
மக்களை குழப்பவும் அரசாங்கத்தின் மீது முரண்பாட்டுக் கருத்துக்களை ஏற்படுத்தவுமே சிலர் முயற்சிக்கின்றனர்.
சிறிலங்கா மீது கடுமையான அனைத்துலக அழுத்தம் ஏற்படவும் இராணுவத்தினர் மீது விசாரணைகளை மேற்கொள்ளவும் பிரதான காரணம் மகிஹிந்த ராஜபக்சவே.
அன்று நாம் இராணுவத்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்.
அதேபோல் அனைத்துலக விசாரணை தேவையென அனைத்துலக தரப்பு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்தில் சிறிலங்காவில் பலமான உள்ளக பொறிமுறைகளை கையாண்டிருந்தால் இன்று இவ்வாறான அழு த்தங்கள் ஏற்பட்டிருக்காது.
ஆகவே எம்மீது குற்றம் சுமத்தும் மகிந்த அணியினர் முதலில் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.
அன்று சரியான வேலைத்திட்டங்களை கையாண்டிருந்தால் இன்று நாம் அனைவரும் இலகுவான முறையில் எமக்கு எதிரான அழுத்தங்களை சமாளித்திருக்க முடியும்.
இன்று பிரதமர் ரணில் மற்றும் எமது அரசாங்கம் இந்த விடயங் களை மிகச்சரியாக கையாண்டு வருகின்றது.
எமது இராணுவத்தை விசாரணைக்கு உட்படுத்த எந்தவித தேவையும் எமக்கு இல்லை.
முன்வைக்கப்ப ட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அமைய இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை விசாரிக்க வேண்டியது எமது கடமையாகும்.
சிறிலங்காவின் சட்டம் அனைவருக்கும் சமமானது. அதேபோல் அனைவரும் எமது சட்டங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும்.
மேலும் சிறிலங்கா இராணுவம் மீது அனைத்துலக அமைப்புகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் இந்த விசாரணை முறைமைகள் தொடர்பிலும் நானே இராணுவத்தை தெளிவுபடுத்தி வருகின்றேன்.
அதே போல் இவர்கள் தொடர்பிலான சட்ட உதவிகளை யும் எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.