ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் சென்றார்.
ஐ.நா பொதுச் சபையின் 70ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் 30 ஆம் நாள் உரையாற்றவுள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் தலைவர் பீற்றர் மியூரர், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கென்னத் ரொத், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் நிர்வாகி ஹெலன் கிளார்க் ஆகியோரையும், சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தின் போது சந்திக்கவுள்ளார்.
சிறிலங்கா அதிபருடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மற்றும் திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோரும், நியூயோர்க் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.