அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’ போட்டார் சிறிலங்கா பிரதமர் ரணில்
தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, கட்டாயம் சமூகமளித்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“மோதிக் கொண்டிருந்த இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. இது நாட்டின் வரலாற்று புரட்சியாகும்.
நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும்,ஜேவிபியுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம்.
கேள்வி நேரங்களின் போது அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அமர்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளோம்.
புதிய நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமக்கு வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கட்டாயம் நாடாளுமன்ற ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
அத்துடன் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களையும் மட்டுப்படுத்தவுள்ளோம். தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை குறைக்க வேண்டியுள்ளது.
அதற்கு பதிலாக நாட்டு மக்கள் எங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.