அமெரிக்காவின் எதிர்காலத் திட்டம் – ரிச்சர்ட் ஆர்மிரேஜ் விளக்கம்
சிறிலங்காவுக்கு ஜனநாயகம் எவ்வளவு பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதைக் காண முடிந்துள்ளதாக, அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயயணம் மேற்கொண்டுள்ள அவர், சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான எதிர்கால உறவுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின் மூலம், சிறிலங்காவில் ஜனநாயகத்தின் அற்புதத்தை காண முடிந்தது.
அமெரிக்காவின் பார்வையில், நாம் இப்போது தென்கிழக்காசியாவின் மீது கவனம் செலுத்தவுள்ளோம். ஆசியாவிலும் கூட அதற்கான தேவை உள்ளது.
ஏனென்றால் நாம் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறோம். நாம் தென்சீனக் கடல் பிராந்தியத்தில் இருக்க வேண்டும்.
தென்சீனக்கடலின் எதிர்காலம் குறித்து நாம் கேள்வி எழுப்பிய போது, மிகப் பெரிய பசுபிக் சமுத்திரம் எம் இருவருக்கும் போதும் என்கிறார்கள்.
ஆனால் இதற்கு மேல் எம்மிடம் விளக்கம் இல்லை. இது மலேசியா, தாய்லாந்து, தாய்வான், வியட்னாம், ஜப்பானின் பாதுகாப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
எனவே, நாம் நிச்சயம் இந்த முன்னேற்றங்களைக் கண்காணிக்க வேண்டும்.
நாம் மீண்டும் திரும்பி வந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், நாம் ஒருபோதும் விட்டுச் செல்லவில்லை என்பதேயாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.