அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் அடுத்தவாரம் நியமனம்
அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம் நிறைவடைந்து விடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச.
எனினும், அரசியலமைப்பு சபைக்கான சிவில் சமூகத்தின் சார்பில் தெரிவாகும் உறுப்பினர்களை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்பதால், அவர்கள் வரும் 22ஆம் நாள் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபை நியமிக்கப்பட்ட பின்னர், புதிய லஞ்ச ஊழல் ஆணைக்குழு நியமிக்கப்படும்.
10 பேர் கொண்ட அரசியலமைப்பு சபைக்கு, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் ஏற்கனவே அதிகாரபூர்வ உறுப்பினர்களாகி விட்டனர்.
சிறிலங்கா அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தமது சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒவ்வொருவரை அரசியலமைப்பு சபைக்கு நியமிப்பர்.
மற்றொரு உறுப்பினரை, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் அடுத்த வாரம் தெரிவு செய்யும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.