அமெரிக்க செனட்டின் உயர் அதிகாரிகள் சிறிலங்காவில் – அரசதரப்பு, கூட்டமைப்புடன் சந்திப்பு
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் மூத்த நிபுணத்துவ அதிகாரிகளாகப் பணியாற்றும், டாமியன் எவ் முர்பி மற்றும் சாலோட் ஓல்ட்டாம் முரே ஆகியோரே சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடன் இணைந்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
அதேவேளை, இவர்கள் தனித்தனியாகவும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, அமெரிக்க அதிகாரி டாமியன் எவ் முர்பி தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்து, எத்தகைய விசாரணையிலும் நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கூட்டமைப்பின் கரிசனைகளையும் கேட்டறிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் இந்த மாத இறுதியில், சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்க உயர் அதிகாரிகளின் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.