எதிர்க்கட்சி பிரதம கொரடா பதவியை ஜேவிபிக்கு விட்டுக் கொடுத்தது கூட்டமைப்பு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜேவிபிக்கு விட்டுக் கொடுத்துள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவாக ஜேவிபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திசநாயக்க நேற்று அறிவிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் கட்சியைச் சேர்ந்த ஒருவரே, எதிர்க்கட்சியின் பிரதம கொரடா பதவியையும் வகிப்பது வழக்கம்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா.சம்பந்தன் ஏற்றுக் கொண்ட நிலையில், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா பதவியை ஜேவிபிக்கு விட்டுக் கொடுத்துள்ளது கூட்டமைப்பு.
ஜேவிபிக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காகவே அதனை விட்டுக் கொடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தாமும் எதிர்க்கட்சியில் இருப்பதால், தமது கட்சி இதனை ஏற்றுக் கொண்டுள்ளதாக, ஜேவிபியின் பரப்புரைச் செயலர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்று ஜேவிபி வலிறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.