நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற கணவன் – மனைவி
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர், கணவனும் மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.
ஐதேகவின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர் தயா கமகே. ஐதேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார் அனோமா கமகே.இவர்கள் இருவரும் கணவன் மனைவி ஆவர்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இவர்கள் அருகருகே அமர்ந்திருந்ததுடன், ஒன்றாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றனர்.
சிறிலங்கா நாடாளுமன்ற வரலாற்றில், 35 ஆண்டுகளுக்கு முன்னர் கணவனும் மனைவியும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தனர்.
ஐதேகவின் சார்பில் ஹரிஸ்பத்துவ மற்றும் குண்டசாலைத் தொகுதிகளின் உறுப்பினர்களாக ஆர்.பி.விஜேசிறியும், திருமதி விஜேசிறியும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தனர்.
அதேவேளை, இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றவர்களில் அண்ணன் – தம்பி, தந்தை- மகன், மாமன்- மருமகன் என உறவுமுறையுடைய பலரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.