எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இல்லை – கூட்டமைப்புக்கு குழுக்களின் பிரதி தலைவர் பதவி
சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இடம்பெறாது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பாக கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படாத நிலையிலேயே, அதுதொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்படாது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோரி வருகின்றன.
அதேவேளை, இன்றைய அமர்வில், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறும்.
சபாநாயகராக, கரு ஜெயசூரிய நியமிக்கப்படவுள்ளார். பிரதி சபாநாயகர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்படும்.
அதேவேளை, குழுக்களின் பிரதித் தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.