சம்பூரில் மீளக்குடியேறிய மக்களுக்கு காணிஉரிமை சான்றிதழ்களை வழங்கினார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் திருகோணமலை சம்பூருக்கு பயணம் மேற்கொண்டு, மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்கினார்.
சம்பூரில், பொருளாதார வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட மற்றும் சிறிலங்கா கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள், உயர்நீதிமன்ற உத்தரவுக்கமையவும், புதிய அரசாங்கத்தின் முடிவுக்கமையவும் மீளவும் பொதுமக்களிடமே வழங்கப்பட்டுள்ளன.
இந்த காணிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீளக்குடியமரத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று பிற்பகல், அங்கு சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மீளக் குடியமரும் மக்களிடம், அவர்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்கான உறுதிச்சான்றிதழ்களை வழங்கினார்.
25 குடும்பங்களுக்கு காணி உரிமைச் சான்றிதழ்களும், காணிகளைத் துப்புரவு செய்வதற்காக 13 ஆயிரம் ரூபா கொடுப்பனவையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுமந்திரன், யோகேஸ்வரன், அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் பயணத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் இணைந்து ஆலய வழிபாடுகளை மேற்கொண்ட சிறிலங்கா அதிபர், மீளக்குடியேறிய குடும்பங்களின் சில தற்காலிக குடிசைகளுக்குள் சென்றும் பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படங்கள் – எஸ்.எஸ்.குமார் மற்றும் சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு