ரணிலுக்குப் பின்னால் மக்கள் இருப்பதாக தேர்தல் மேடையில் உளறிய மகிந்தவின் விசுவாசி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரை மேடையில், வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ரணிலுக்குப் பின்னால் நிற்பதாக உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்கியே தீருவோம் என்று கங்கணம் கட்டி நிற்பவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே.
இவர் முன்னர் ஐதேகவில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தாவிச் சென்றவர்.
இவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பேரப்புரை மேடையொன்றில் உரையாற்றிய போது, வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ரணிலுக்குப் பின்னால் நிற்பதாக- வாய் தடுமாறி கூறி விட்டார்.
எனினும், பின்னர் தனது தவறை உணர்ந்து கொண்டு, மகிந்தவின் பின்னால் மக்கள் நிற்பதாக குறிப்பிட்டார்.
காமினி லொக்குகே, வாய் தடுமாறிய காணொளி இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னான்டோ, இதிலிருந்தே யார் உண்மையான வெற்றியாளர் என்று தெரிந்து விட்டது என்றும், அடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் என்று காமினி லொக்குகே உறுதிப்படுத்தி விட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.