அஞ்சல் வாக்களிப்புக்கு நாளை மறுநாள் கடைசி வாய்ப்பு
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறிய அரச பணியாளர்கள், நாளை மறுநாள்- ஓகஸ்ட் 11ஆம் நாள் தமது வாக்குகளை அளிக்க முடியும் என்று சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு கடந்த 3ஆம் நாள் ஆரம்பமானது. அன்றைய நாள், பாடசாலை ஆசிரியர்கள் அஞ்சல் மூல வாக்களிப்பில் பங்கேற்றனர்.
அதையடுத்து, கடந்த 5ஆம், 6ஆம் நாள்களில் ஏனைய அரச பணியாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதேவேளை, தேர்தல் திணைக்கள அதிகாரிகள், மற்றும் மாவட்டச் செயலகங்களில் பணியாற்றும் அரச பணியாளர்கள், நேற்று அஞ்சல் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
நேற்று வாரஇறுதி நாளாக இருந்ததால், வாக்களிக்கத் தவறியவர்கள், நாளை மறுநாள் வாக்களிக்க முடியும் என்றும் சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த அரச பணியாளர்களில் 94 வீதமானோர் வாக்களித்து விட்டதாக யாழ். செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.