மேலும்

சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்பாட்டில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா

Srilanka-chinaசீனாவினால் முன்முயற்சி மற்றும் கூடுதல் மூலதனத்துடன் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இணைந்து கொள்ளும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.

சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, வரும் 29ஆம் நாள் பீஜிங்கில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்து கொள்வது தொடர்பான உடன்பாட்டில், கையெழுத்திடுவார்.

மேற்கு நாடுகளின் பெரும்பாலான முதலீடு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துலக நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியவற்றுக்குப் போட்டியாக, சீனா உருவாக்கும் இந்த ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் சிறிலங்காவும் இணைந்து கொள்வதாக, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் உள்ளிட்ட 57 நாடுகள் இணைந்து கொள்ள இணங்கியுள்ளன.

 சீனாவிடம் 100 மில்லியன் டொலர் கடன்பெற அமைச்சரவை அங்கீகாரம்

இதற்கிடையே, வீதி அபிவிருத்தித் திட்டத்துக்காக சீனாவின் அபிவிருத்தி வங்கியிடம் 100 மில்லியன் டொலரை சிறிலங்கா அரசாங்கம் கடனாகப் பெறவுள்ளது.

தங்காலை- வீரகெட்டிய, வீரகெட்டிய மித்தெனிய வீதிகளைப் புனரமைப்பதற்காக, இந்த நிதி சீனாவிடம் கடனாக பெறப்படவுள்ளது,

சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் முன்வைத்த இதுதொடர்பான அமைச்சரவை பத்திரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *