போலி நகைகளைக் கொடுத்து முன்னாள் போராளிகளை ஏமாற்றிய மகிந்த
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சார்பில் பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் போலி என்று தெரியவந்துள்ளது.
வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம், பாலிநகரில், நேற்று நடந்த நடமாடும் சேவையில், முன்னாள் போராளி ஒருவர், வடக்கு மாகாண அமைச்சரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர் ஒருவருக்கு, முன்னாள் போராளி ஒருவர் கையளித்த மனு ஒன்றிலேயே, போலி தங்க நகையை கொடுத்து மகிந்த ராஜபக்ச ஏமாற்றியது குறித்து விபரித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் வைத்து, 2010ம் ஆண்டு ஜூன் மாதம் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளான 53 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அப்போது மகிந்த ராஜபக்சவின் சார்பில் தங்கச்சங்கலிகள் என்று கூறி ஒவ்வொரு ஜோடிக்கும் பரிசளிக்கப்பட்டது.
ஆனால் அவை போலி நகைகளாகும், அதனால் சில மாதங்களிலே அவை பளபளப்பு மங்கி விட்டதாகவும் அந்த முன்னாள் போராளி குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்தின் போது தமக்கு வீடு, காணி, மற்றும் வாழ்வாதார வசதிகள் செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், அவை ஏதும் தரப்படவில்லை என்றும், அந்த முன்னாள் போராளி சுட்டிக்காட்டியுள்ளார்.