பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் கொழும்பு பயணம் மிகமுக்கியமானது- பாகிஸ்தான் நாளிதழ்
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதன் பின்னணியில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி கொழும்புக்கு மேற்கொண்டுள்ள பயணம் மிக முக்கியமானது என்று பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் நான்கு நாள் பயணமாக நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா வந்தடைந்துள்ள நிலையிலேயே, ‘தி எக்ஸ்பிரஸ் ரிபியூன்’ என்ற பாகிஸ்தான் நாளிதழ், இந்தப் பயணத்தை மிகமுக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளது.
அதில், “இந்த ஆண்டு துவக்கத்தில் கொழும்பில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள பின்னணியில் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இந்தப் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
பாகிஸ்தானும் சிறிலங்காவும், நீண்டகாலமாக- குறிப்பாக பாதுகாப்புத்துறையில்- உறவுகளைக் கொண்டிருக்கின்றன.
சிறிலங்காவில் நீடித்த விடுதலைப் புலிகளின் கிளர்ச்சியைத் தோற்கடிப்பதற்கு, வரலாற்று ரீதியாக கொழும்புடன் இணைந்து பணியாற்றியிருந்தது இஸ்லாமாபாத்.
எவ்வாறாயினும், எனினும், இந்த ஆண்டு துவக்கத்தில், நடந்த தேர்தலில் ஆச்சரியமாக சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின்னர், கொழும்பின் முன்னுரிமைகள் மாறலாம்.
மைத்திரிபால சிறிசேன ஒரு இந்திய சார்பாளராகத் தென்படுகிறார்.
தனக்கு முன்னர் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்சவை விடவும், அதிகமான சுதந்திரமான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்க முனைகிறார்.
முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நெருக்கமானவர்.
இந்தப் பின்புலத்தில் தான், ஜெனரல் ரஹீலின் கொழும்புக்கான பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.” கூறப்பட்டுள்ளது.