மேலும்

துறைமுக நகரத் திட்டம் மீளத் தொடங்கும் – சீன நிறுவனம் நம்பிக்கை

colombo-portcityசிறிலங்காவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம், மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக, அதன் கட்டுமானப் பணியை மேற்கொண்ட சீனாவின் தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் உதவித் தலைவர்  சன் சியூ தெரிவித்துள்ளார்.

மக்காவுவில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு கருத்து வெளியிட்ட சீனாவின் தொலைத்தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் உதவித் தலைவர்  சன் சியூ,

“ஒவ்வொரு நாட்டுக்கும் சொந்தமான பிரச்சனைகள் இருக்கும். சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்யும் நோக்கமோ,  அதற்கான ஆற்றலோ எமது நிறுவனத்திடம் இல்லை.

அபிவிருத்தியில் அர்ப்பணிப்புள்ள ஒரு அரசாங்கம் கவனமாக முடிவெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட 1.4 பில்லியன் டொலர் செலவிலான கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை, தற்போதைய அரசாங்கம் கடந்த மார்ச் 6ம் நாள் இடைநிறுத்தியுள்ளது.

இந்த திட்டத்தை தொடர்வது தொடர்பாக முடிவெடுப்பதற்காக சிறிலங்கா பிரதமரின் செயலர் தலைமையிலான அதிகாரிகள் மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *