மலையகத் தமிழர் நலனுக்காக உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி
மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று தமிழ்க்கட்சிகள் இணைந்து- தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளன. கொழும்பு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ்மக்களின் நலனுக்காக இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கொழும்பில் நடந்த நிகழ்வில் இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், வி.இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நலனை மையப்படுத்தி செயற்படுவது போன்று, மலையகத்திலும் தெற்கிலும் உள்ள மலையகத் தமிழரின் நலன்களை மையப்படுத்தி இந்தப் புதிய கூட்டணி செயற்படும் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.