மேலும்

சிறைக்குள் அடைக்கப்பட்டார் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச – மே 05 வரை விளக்கமறியல்

basil-remand (1)திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, மே 5ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்றுக்காலை 11 மணியளவில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற அவரிடம், ஆறு மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

அதையடுத்து, நேற்றுமாலை பசில் ராஜபக்சவைக் கைது செய்த சிறிலங்கா காவல்துறையினர், கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

பசில் ராஜபக்சவுடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலர் நிகால் ஜெயதிலக, திவிநெகும நிதியத்தின் பணிப்பாளர் ரணவக்க ஆகியோரையும், சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.

basil-remand (2)

basil-remand (3)

basil-remand

இவர்கள் மூவரையும், எதிர்வரும் மே 5ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறைச்சாலையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

பசில் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கவும் பசில் ராஜபக்சவுக்கு நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட பசில் ராஜபக்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில், அடைக்கப்பட்டார்.

அப்போது சிறைச்சாலை வாசலில் பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, பசில் ராஜபக்ச வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் உள்ள மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *