நாடாளுமன்றம் இப்போது கலைக்கப்படாது – மேற்குலக தூதுவர்களிடம் மைத்திரி உறுதி
அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னரே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மேற்கு நாட்டுத் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல், அமெரிக்க பதில் தூதுவர் அன்ட்ரூ மான், பிரித்தானிய பிரதித் தூதுவர் லாறா டேவிஸ், ஜேர்மனி தூதுவர் ஜேர்ஜன் மோர்ஹாட் ஆகியோர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதன் போது அவர்கள், ஜனநாயகத்தை வலுப்படுத்தும், ஊழல் மோசடிகளை ஒழிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளுக்கு தமது நாடுகள் முழு ஆதரவளிக்கும் என்று தெரிவித்தனர்.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக எழுந்துள்ள சூழல் குறித்து மேற்கு நாட்டுத் தூதுவர்களுக்கு சிறிலங்கா அதிபர் எடுத்துக் கூறியதுடன், அரசியலமைப்புத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றிய பின்னரே நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.