மேலும்

கோத்தாவிடம் இன்று விசாரணை – முன்னிலையாகாமல் நழுவ முயற்சி

gotaமுன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

இந்தநிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணியகத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, கொழும்பு பிரதம நீதிவான் நேற்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணை  செய்வதற்காக, அவரை இன்று முன்னிலையாகும்படி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் அவர் இன்று ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்னலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், கோத்தாபய ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணியகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, பிவிதுரு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணியகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்றும், கொழும்பு பிரதம நீதிவானிடம், எடுத்துக்கூறிய சிறிலங்கா காவல்துறையினர், அந்த போராட்டத்தை நடைசெய்யும் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை, நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி போராட்டம் நடத்தப் போவதாக, உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய கோத்தாபய ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இன்று கோத்தாபய ராஜபக்ச ஆணைக்குழுவின் விசாரணைக்கு முன்னிலையாக மாட்டார் என்றும், அவரது சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள், விசாரணைக்கான புதிய நாள் ஒன்றைக் கோருவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *