மைத்திரியின் சீனப் பயணத்தின் போது சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து முக்கிய பேச்சு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதிப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத் திட்ட விவகாரம், சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான சுதந்திர வர்த்தக உடன்பாட்டைச் செய்து கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பீஜிங் பயணத்தின் போது, சுதந்திர வர்த்தக உடன்பாடு மற்றும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் ஆகியன குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2005இல் 28.4 மில்லியன் டொலராக இருந்த சீனாவுக்கான சிறிலங்காவின் ஏற்றுமதி, 2013இல், 121.6 மில்லியன் டொலராக அதிகரித்துள்ள போதிலும்,வர்த்தகச் சமநிலைய சீனாவுக்குச் சாதகமாகவே இருந்து வருகிறது.
2013இல் இருதரப்பு வர்த்தகம் 3.62 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.
தற்போது, சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில்,3.1 பில்லியன் வர்த்தகம் இடம்பெறுகின்ற நிலையில், இதில் 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் மற்றும் சேவைகளை சீனாவில் இருந்தே சிறிலங்கா இறக்குமதி செய்கிறது.
சீனாவுக்கான சிறிலங்காவின் பொருட்கள் சேவைகள் ஏற்றுமதி வெறும் 200 மில்லியன் டொலர் மட்டுமேயாகும்.
இந்த நிலையில், இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும், வர்த்தகச் சமநிலையை உறுதிப்படுத்தவும், சுதந்திர வர்த்தக உடன்பாட்டைச் செய்து கொள்ள சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இந்த உடன்பாடு 2015ம் ஆண்டு ஜுன் மாதம் கையெழுத்திடத் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.