ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் கைப்பற்றினார் மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவும், பொருளாளராக அனுர பிரியதர்சன யாப்பாவும் தொடர்ந்து பணியாற்றுவர் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவே நீடித்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பொறுப்பும் மைத்திரிபால சிறிசேனவின் வசம் வந்துள்ளது.