அரசியல்தீர்வை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் – மோடியிடம் கோரினார் விக்னேஸ்வரன்
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை உறுதிப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“நாங்கள் நீதியான, நியாயமான, கண்ணியமான தீர்வையே எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் இந்தியப் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை விரைவாகவும், முழுமையாகவும் நடைமுறைப்படுத்துமாறு முன்னதாக கொழும்பில் இந்தியப் பிரதமர் கருத்து தெரிவித்திருந்தார்.
யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று உரையாற்றிய, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதுகுறித்து சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
“13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வாக அமையாது.
இந்தியாவில் உள்ளது போன்ற அதிகாரப் பகிர்வு முறை தான் சிறிலங்காவுக்குத் தேவை.
தற்போதுள்ள 13வது திருத்தச்சட்டமும் சரி, 1972ம் ஆண்டின் அரசியலமைப்பும் சரி, தமிழர்களின் பங்கேற்பு இல்லாமல் உருவாக்கப்பட்டவையாகும்.
இவை வடக்கு, கிழக்கிலுள்ள மக்களின் அபி்லாசைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்கவில்லை.
இந்திய அரசியலமைப்பின் படி, மாநிலங்களால் தமது சொந்த அபிவிருத்திகளை மேற்கொள்ள முடிவதுடன், சட்டம், ஒழுங்கு மற்றும் காணிகளை நிர்வாகம் செய்ய முடிகிறது.
ஆனால், அதுபோன்று வடக்கு மாகாணசபையால் செயற்பட முடியாது.
இன்றும் கூட சமாந்தரமான நிர்வாக கட்டமைப்பே உள்ளது. ஒன்று மத்திய அரசினால் வழிநடத்தப்படுகிறது. மற்றது மாகாண சபையினால் செயற்படுத்தப்படுகிறது.
தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இந்திய அரசாங்கம், சிறிலங்காவின் மத்திய அரசாங்கம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கிடையே பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.