யாழ்ப்பாணம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர்
அடுத்த மாதம் மூன்று நாள் பயணமாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் மார்ச் 13ம் நாள் சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பிக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுநாள், யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில், இந்திய பல்வேறு மீள்கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
அத்துடன், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வுக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.
எனினும், சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம், இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை.
இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டக் கலந்துரையாடல்களின் போது, பலமுறை இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண பயணம், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது, அவர்களுடன் இணைந்திருக்கிறது என்பதைக் கோடி காட்டுவதாக அமைந்திருக்கும்.
அதேவேளை, இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணம் தொடர்பான பணிகளைக் கவனிப்பதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மார்ச் முதல் வாரத்தில் சிறிலங்கா செல்லக் கூடும் என்றும், இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.