அடுத்தமாதம் 13ம் நாள் சிறிலங்கா வருகிறார் மோடி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்பதை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை அறிவித்தார்.
”அடுத்தமாதம், 13ம் நாள் கொழும்பு வரும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 15ம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளில், சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.” என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கடைசியாக முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1987ம் ஆண்டு அரசுமுறைப் பயணமாக சிறிலங்கா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.