முன்னைய அரசின் உடன்பாட்டை மதிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் கடமை – சீனா
இன்னொரு நாட்டுடன் முன்னைய அரசாங்கம், செய்து கொண்ட இருதரப்பு உடன்பாட்டை மதிக்க வேண்டியது ஜனநாயக நாடு ஒன்றின் கடப்பாடு என்று சீனா தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக, புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்தப் போவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம், கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரி ஒருவர்,
“கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து விசாரணை நடத்தும் இலங்கை அரசாங்கத்தின் முடிவுக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், இன்னொரு நாட்டுடன், முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட அனைத்துலக இருதரப்பு உடன்பாட்டை மதிக்க வேண்டியது, ஜனநாயக நாடு ஒன்றின் அரசாங்கத்தின் கடமையாகும்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.