திங்களன்று ஜெனிவாவில் முக்கிய கூட்டம் – போர்க்குற்ற விசாரணை அறிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்
சிறிலங்காவின் போர்க்குற்ற அறிக்கை விவகாரம் குறித்து, வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் நடத்தப்படவுள்ள கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நடத்திய விசாரணைகளின் அறிக்கை, அடுத்த மாதம் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், சிறிலங்காவில் புதிதாகப் பதவிக்கு வந்துள்ள அரசாங்கம், உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்குவதற்கு காலஅவகதாசம் அளிக்கும் வகையில், வரும் ஓகஸ்ட் மாதம் வரை அறிக்கையை வெளியிடாமல் பிற்போடும்படி கோரியுள்ளது.
இதுதொடர்பாக ஏற்கனவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை இன்று நியுயோர்க்கில் சந்திக்கும் போதும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தவுள்ளார்.
எனினும், இதுதொடர்பான இறுதி முடிவு ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்த அறிக்கை தொடர்பாக வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குழுக் கூட்டம் ஒன்றில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் அறிக்கை குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறுகிறது.