ஐ.நா அறிக்கையை தாமதப்படுத்த அமெரிக்கா இணக்கம்
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக புதிய நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது தாமதிக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வொசிங்டனில் நேற்று பிற்பகல் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்காவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அவர் வெளிப்படையாக கூறாவிடினும், சூசகமாக முறையில் அதனை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
“அறிக்கையைத் தாமதிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவு முக்கியமானது.
ஆனாலும், இதுபற்றி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவர் ஆகியோரும் முடிவெடுக்க வேண்டும்.
எனினும், அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது தாமதிக்கப்படும் என்று நம்புகிறேன்.
உள்நாட்டில் பொறுப்புக்கூறும் பொறிமுறைக்குச் சமாந்தரமாக, உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அடுத்த வாரம் தென்னாபிரிக்காவுடன் பேச்சுக்களை ஆரம்பிக்கவிருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.