மைத்திரியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு – இனப்படுகொலைத் தீர்மானம் குறித்து விளக்கம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
அதிபர் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,
‘தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாண சபையின் இனப்படுகொலை தீர்மானமாகும் என அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியிருந்தேன்.
வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்று சுதந்திரதின வைபவத்தில் அதிபர் ஆற்றிய உரையின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்றுள்ளனர் எனவும், அத்தகைய உறவு விரைந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.
100 நாள் வேலைத்திட்டத்தில், தமிழ் மக்களால் பார்க்கக் கூடிய வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
அதற்கு, இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருக்கிறார்” என தெரிவித்தார்.