சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது சீனா
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்துடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவே சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர், விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னைய ஆட்சியில், சிறிலங்காவில் சீனாவினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
அத்துடன், இந்தியாவுடனும், நெருக்கமான உறவுகளை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இந்தநிலையிலேயே சிறிலங்காவுடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வதற்காகவும், தனது திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்துப் பேச்சு நடத்தவுமே, சிறப்புத் தூதுவர் ஒருவுரை சீன அரசாங்கம் கொழும்புக்கு அனுப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.