சிறிலங்காவுக்கு ஆறுமாத காலஅவகாசம் – தடை தற்காலிகமாக தளர்வு
சிறிலங்காவின் மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தடையை, ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளதாக, சிறிலங்காவின் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வேதாராச்சி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மீன்பிடித்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், சிறிலங்காவில் இருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்த்து.
கடந்தமாத நடுப்பகுதியில் இந்த தடை நடைமுறைக்கு வந்திருந்தது.
இதனால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி மூலம் சிறிலங்காவுக்கு ஆண்டு தோறும் கிடைத்து வந்த சுமார் 100 மில்லியன் டொலர் வரையிலான வருமானம் முற்றாகவே இழக்கப்படும் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, சிறிலங்காவிடம் இருந்து மீன் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை, ஆறுமாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது.