உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை அனைத்துலக தரம் வாய்ந்தாக இருக்க வேண்டும் – பான் கீ மூன்
போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா உருவாக்கும் உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறை, அனைத்துலகத் தரம் வாய்ந்ததாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பணியகத்தைச் சேர்ந்த எரி கனேகோ இதுகுறித்து தகவல் வெளியிடுகையில்,
”சிறிலங்காவில் போருக்குப் பின்னர் சமாதானம் மற்றும் நல்லிணக்க விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதேபோன்று நாட்டின் ஜனநாயகம், அபிவிருத்தியிலும் கணிசமான மாற்றங்களைக் காணமுடிகிறது.
இந்த மாற்றங்களுக்கு ஐ.நா. ஆதரவு வழங்கியிருந்தது. இந்த ஆதரவைத் தொடரவே ஐ.நா. விரும்புகின்றது.
சிறிலங்கா அரசாங்கம் வகுத்துள்ள புதிய, பொறுப்புக்கூறும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் கவனம் செலுத்தி வருகிறார்.
இதேபோன்று சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார முன்னேற்றங்களுக்கு மனித உரிமைகள் ஆணையாளரும் ஆதரவு வழங்குகிறார்.
எனினும் மனித உரிமைகள் விடயத்தில் சிறிலங்காவுக்கு சில சிக்கல்கள் உள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தனது விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா கருத்துத் தெரிவிக்க வேண்டியிருக்கும்.
போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு சிறிலங்காவுக்கு தொடர்ந்தும் உதவி வழங்கும்.
சிறிலங்கா அரசாங்கம் புதிய உள்நாட்டுப் பொறிமுறையை முன்னெடுப்பது குறித்து ஐ.நா பொதுச்செயலர் அறிந்துள்ளார். அவர் இதனை உன்னிப்பாக ஆராய்வார்.
சிறிலங்கா நம்பகத்தன்மை மிக்க உள்நாட்டு பொறிமுறைகளை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.