குழப்பத்தை ஏற்படுத்த முனையும் இராணுவ அதிகாரிகள் – கருத்துக்கூற மறுக்கும் இராணுவப் பேச்சாளர்
வடக்கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு இரண்டு இராணுவ அதிகாரிகள் ஒரு குழுவினருக்குப் பயிற்சிகளை அளித்து வருவதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கருத்து வெளியிட மறுத்துள்ளார்.
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களின் மீது கற்களை வீசித் தாக்கி, மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்துவதன் மூலம், அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆட்சியைப் பிடிக்க கோத்தாபய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இதன் ஒரு கட்டமாக கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான ஒரு பிரிகேடியர் மற்றும் ஒரு கேணல் என இரண்டு இராணுவ அதிகாரிகள் 400இற்கும் அதிகமானோரைக் கொண்ட குழுவினருக்கு முகாம் ஒன்றில் பயிற்சி அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீரவிடம் கேள்வி எழுப்பிய போது, அதுகுறித்து அவர் கருத்து வெளியிட மறுத்துள்ளார்.