திட்டமிட்டே மகிந்தவுடன் கைகுலுக்கவில்லை – காரணத்தை விபரிக்கிறார் மைத்திரி
சிறிலங்கா அதிபருடன் கைகுலுக்கி தனது கைகளில் கறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாததால் தான், நேற்று அவர் கைகுலுக்க முயன்றபோது அதனைத் தவிர்த்துக் கொண்டதாக கூறியுள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.
ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில், நேற்றுக்காலை வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கைகொடுக்க முயன்றார் மகிந்த ராஜபக்ச.
மைத்திரிபால சிறிசேனவை நோக்கி மகிந்த ராஜபக்ச கைகளை நீட்டிய போது, அவருக்கு கைகொடுக்காமல், கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்திருந்தார்.
மகிந்த ராஜபக்சவுக்கு ஏன் கைகொடுக்கவில்லை என்று மைத்திரிபால சிறிசேன செய்தியாளர்களிடம் கூறுகையில்,
”என்னை நோக்கி மகிந்த ராஜபக்ச தனது கையை நீட்டினார். அவரது கைகளைப் பற்றி எனது கைகளை கறைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
உண்மையான சிங்கள, பௌத்த முறைப்படி நான் கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்தேன்.
மகிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்குவதில்லை என்ற எனது முடிவில் தைரியத்துடன் உறுதியாக இருந்தேன்.
நான் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஒரு வாரத்தில், எரிபொருள், எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் எவ்வாறு அச்சம் கொண்டுள்ளது என்பதை இதுவே எடுத்துக் காட்டுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.