குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் ராவய ஆசிரியர்
மகிந்த ராஜபக்சவை விடவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று செய்தி வெளியிட்ட ராவய சிங்கள வாரஇதழின் ஆசிரியர் கே.டபிள்யூ.ஜனரஞ்சன, சிறிலங்கா காவல்துறை குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத்துறைத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு தன்னிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக, ராவய ஆசிரியர் ஜனரஞ்சன தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவுக்கு 59 வீத வாக்குகள் கிடைக்கும் என்றும், மகிந்தவுக்கு 41 வீத வாக்குகள் கிடைக்கும் என்றும் புலனாய்வு அறிக்கை சமர்ப்பித்த அரச புலனாய்வுப் பணிப்பாளரை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆத்திரத்தில் இடமாற்றம் செய்துள்ளதாக கடந்தமாதம் 30ம் நாள் ராவய செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும், அவ்வாறு எந்த இடமாற்றமும் செய்யப்படவில்லை எனவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் கூறியிருந்தார்.
அத்துடன், இந்தச் செய்திக்கு மன்னிப்புக் கோராவிடின், வழக்குத் தொடரப் போவதாகவும் அரசதரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், தமது செய்தி சரியானதே என்றும், உறுதிப்படுத்தப்பட்ட அந்த செய்தி குறித்த ஆதாரங்கள் இருப்பதாகவும் ராவய நிர்வாகம் கூறிவிட்டது.
இந்த நிலையிலேயே ராவய ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.