இந்தியாவுக்கு எதிராக சூழ்ச்சி செய்யவில்லை – என்கிறது சிறிலங்கா
சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தியாவுக்கு எதிராக சீனாவைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய, வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன,
“அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு சீனா அளித்து வரும் உதவிகளை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் உதவிகள் பெரிதும் வடக்கை மையப்படுத்தியதாக உள்ளது.
வடக்கை மீளவும் அபிவிருத்தி செய்வதே இந்தியாவின் முக்கிய கவனம் செலுத்துகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவின் உதவிகளை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறது.
இது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நாட்டின் ஏனைய பகுதிகளையும் கூட அபிவிருத்தி செய்ய வேண்டியது எமது பொறுப்பு.
நாம் இன அடிப்படையில் அரசியல் செய்யக்கூடாது. புவியியல் இடங்களை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்யக் கூடாது.
எல்லா இடங்களையும் சமமாக அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பு.
இந்தியா பொருத்தமான, இன்னும் உதவிகளை வழங்க முன்வந்தால், சிறிலங்கா அரசாங்கம் அதனை வரவேற்கும், எதிர்ப்புத் தெரிவிக்காது.
நாம் எல்லா நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டிருக்கிறோம். எமக்கு இந்தியாவின் முக்கியத்துவம் தெரியும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் நல்ல புரிந்துணர்வைக் கொண்டிருக்கின்றனர். அது நன்றாகவே தொடர்கிறது.
எந்த நாட்டின் மீது நாம் கோபம் கொள்வதற்கு எந்தக் காரணமும் இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்