பொதுமன்னிப்புக்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – சிறிலங்கா அதிபரின் பேச்சாளர்
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு செய்யாவிட்டால், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும், அதுபற்றி இந்தியத் தூதரகத்திடம் தெரிவிக்குமாறு சிறிலங்கா அதிபர் தன்னிடம் கூறியதாக நேற்று பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்திருந்தார்.
எனினும், இந்திய அரசாங்கத் தரப்பு, மேல்முறையீட்டு மனுவை விலக்கிக் கொள்ள தயாராக இல்லை என்று தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், பொது மன்னிப்புக் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க.
இதுபற்றி சிறிலங்கா அதிபர் மட்டுமே பேச முடியும் என்றும் அவரது செயலகத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, மீனவர்களுக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பைப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தான், நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதாக, புதுடெல்லியில் உள்ள அதிகார வட்டாரங்கள் மூலம் அறியப்படுகிறது.
இதுகுறித்து கொழும்புடன் புதுடெல்லி உயர்மட்டத்தில், பேச்சு நடத்தியுள்ளது.
இம்மாதம் நேபாளத்தில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டின் போது, சிறிலங்கா அதிபரைச் சந்திக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரம் குறித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.