ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு
அதிபர் தேர்தலை வரும் ஜனவரி 2ம் நாள் வெள்ளிக்கிழமை நடத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தால், அதற்கு முஸ்லிம்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று மூத்த அரசாங்க வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத் தரப்புக்கு நெருக்கமான சோதிடர்கள், ஜனவரி 2, 3 அல்லது 7ம் நாள் அதிபர் தேர்தலை நடத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.
ஆனால், ஜனவரி 2ம் நாள் வெள்ளிக்கிழமை தாம் மத வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், அன்றைய நாள் தேர்தலை நடத்தக் கூடாது என்று முஸ்லிம்கள் வலியுறுத்துவர் என்று நம்பப்படுகிறது.
அவர்கள், ஜனவரி 3 அல்லது 7ம் நாள் தேர்தலை நடத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.
ஏற்கனவே, ஒருமுறை வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் முஸ்லிம்களின் எதிர்ப்பினால் பின்னர் ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டால், தேர்தல் பணிகளில் ஈடுபடும் முஸ்லிம் அதிகாரிகள் தமது மதக்கடமைகளை நிறைவேற்றுவதில் அசௌகரியங்கள் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, அதிபர் தேர்தலை நடத்தப் பொருத்தமான ஏனைய நாட்களாக, ஜனவரி 15 மற்றும் 21ம் நாள்களும் சோதிடர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.