நாளை பிற்பகல் புதுடெல்லி செல்கிறார் ரணில் – மோடியுடன் பேச்சு, மதிய விருந்துக்கு ஏற்பாடு
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூன்று நாள் அதிகாரபூர்வ இந்தியப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் பல உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை பிற்பகல் புதுடெல்லி செல்லவுள்ளார்.
அவருடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
நாளை மறுநாள் காலை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில், புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுசில் பேச்சுக்கள் இடம்பெறும்.
இந்தப் பேச்சுக்களின் பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது குழுவினருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதியபோசன விருந்து அளிப்பார்.
இந்தப் பேச்சுக்களின் போது. பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும்.
சிறிலங்கா பிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசுவார்.
அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, புதுடெல்லியில் அவர் தங்கியிருக்கும் விடுதியி்ல், இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, தொடருந்து அமைச்சர் சுரேஸ் பிரபு, எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.