காணாமற்போனோர் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்கிறதாம் அதிபர் ஆணைக்குழு
காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஆணைக்குழுவின் செயலாளர் ஹேவா வாசலக குணதாச தெரிவித்துள்ளார்.
தற்போது, இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இறுதி அறிக்கையை வரைவதற்கு, ஆணைக்குழுவுக்கு உதவுவதற்காக முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணியை விரைவுபடுத்துவதற்கு, அதிபர் ஆணைக்குழுவின் ஆணையாளர்களின் எண்ணிக்கையை 3 இல் இருந்து 5 ஆக அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலதிகமான இரண்டு ஆணையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் விரைவில் அதிபர் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.