பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவார் ராஜ்நாத் சிங்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பார் என “சண்டே ரைம்ஸ்“ செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள தனது முதல் பயணத்தின் போது, ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை வகிக்கும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா மற்றும் முப்படைகளின் தளபதிகளையும் சந்திக்கவுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளின் தலைவர்கள் மேற்கொண்ட முந்தைய உயர்மட்டப் பயணங்களின் போது, எட்டப்பட்ட உடன்பாடுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான இந்தியாவின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் கருதப்படுகிறது.
இந்தப் பாதுகாப்புப் புரிந்துணர்வு உடன்பாடு, தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை மேலும் கட்டமைக்கும் ஒரு குடை ஆவணமாகும்.
இது, அதிக கூட்டுப் பயிற்சிகள், பல்வேறு துறைகளில் திறன் மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பரிமாற்றங்கள், இரு நாடுகளின் கடற்படைப் பிரிவுகளின் துறைமுக வருகைகளை அதிகரித்தல் மற்றும் இரு தரப்பினருக்கும் இடையே பாதுகாப்புத் தொழில் ஒத்துழைப்பை ஆராய்தல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
இது ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர், மூன்று மாத முன்னறிவிப்புடன் இதை முடிவுக்குக் கொண்டு வரவோ அல்லது மேலும் மூன்று ஆண்டுகளுக்குத் தொடரவோ தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
இந்த முழுமையான புரிந்துணர்வு உடன்பாடு புதுடில்லியிலோ அல்லது கொழும்பிலோ பகிரங்கப்படுத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது பரிமாறப்பட்ட ஏழு இருதரப்பு ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும்.
