பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பிள்ளையான் எனப்படும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை ஜூலை 13 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து படுகொலைகள் தொடர்பான தொடர் விசாரணையில், மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள அவர் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ரி- 56 துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாக, கடந்த ஜூன் 15 ஆம் நாள், பிள்ளையான் மற்றும் இரண்டு பேரை சந்தேக நபர்களாகக் குறிப்பிட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முறைப்படியான அறிக்கையைச் சமர்ப்பித்தது.
இந்தச் சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இன்றைய விசாரணையின் போது, பிள்ளையான் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சாதாரண சட்டத்தின் கீழ் மாற்ற வேண்டும் என்றும், அவரை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்றும் சட்டவாளரால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.

