அமெரிக்க ஜெனரல் ஷ்னைடர் சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் சந்திப்பு
அமெரிக்காவின் பசுபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர், சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக கொழும்பு வந்துள்ள ஜெனரல் கெவின் ஷ்னைடர், நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவைச் சந்தித்தார்.
பேரனர்த்தங்களின் போதான பதிலளிப்பு, இணையப் பாதுகாப்பு, மற்றும் கடல்சார் மற்றும் வான்வழி விழிப்புணர்வு ஒத்துழைப்பு உள்ளிட்ட, விரிவடைந்து வரும் அமெரிக்க- சிறிலங்கா பாதுகாப்பு பங்காண்மை தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
உலகாளவிய வர்த்தகத்தின் சீரான இயக்கத்திற்கு சிறிலங்காவின் துறைமுகங்களும், கடல் வழித்தடங்களும் இன்றியமையாதவையாகும்.
அந்த நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நவீன, தொழில்வாண்மைத்துவமுடைய, ஒழுக்கமான படைகளைக் கட்டியெழுப்புவதானது, தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறுதித்தன்மை ஆகிய இரண்டிலுமான ஒரு முதலீடாகும்.
அந்த முயற்சியில் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அமெரிக்கா பெரிதும் மதிக்கிறது என்றும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

