சிறிலங்காவுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர் நிதியுதவி
சிறிலங்காவிற்கான நிதி ஒதுக்கீட்டை 100 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவிற்கு இந்த ஆண்டு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை 380 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து, 480 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
200 மில்லியன் அமெரிக்க டொலரை உடனடியாக விடுவிப்பதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடல்களின்போது, சிறிலங்காவின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

