ட்ரம்பின் சிறப்பு தூதுவர் செர்ஜியோ கோர் இன்று சிறிலங்கா பயணம்
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், இன்று முதல் சிறிலங்கா மற்றும் மாலைதீவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உயர்மட்ட சந்திப்புகளுக்காக, அவர் மார்ச் 19 ஆம் நாள் முதல் 24 ஆம் நாள் இந்தப் பயணங்களை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இருக்கும்போது, சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர், அமெரிக்க-சிறிலங்கா உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அரசாங்கத்தின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார்.
முக்கிய கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பதற்கும் துறைமுகங்களைப் பத்திரப்படுத்துவதற்கும், பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக மற்றும் வணிகத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், இரு நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கும் அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தப் பேச்சுக்கள் உதவுவதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
