ட்ரம்பின் சிறப்பு தூதுவர் செர்ஜிஜோ கோர் விரைவில் சிறிலங்கா பயணம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்பு பிரதிநிதி மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவர் செர்ஜிஜோ கோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியப் பயணத்தின் போது, செர்ஜியோ கோரை சந்தித்திருந்தார்.
முன்னதாக, கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற நியூயோர்க்கிற்குச் சென்ற போது, சிறிலங்கா அதிபர் செர்ஜியோ கோரையும் சந்தித்தார்.
அப்போது, தேவைப்படும் போதெல்லாம் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தொடர்பு கொள்ள உதவ முடியும் என்று செர்ஜிஜோ கோர் தெரிவித்திருந்தார்.
புதுடெல்லியில், ஒரு தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, சிறிலங்கா அதிபருக்கும் செர்ஜிஜோ கோருக்கும் இடையே ஒரு சிறப்பு நேரில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக செர்ஜிஜோ கோர் சிறிலங்கா அதிபரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
