குமார ஜெயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தயாரிக்க உத்தரவு
சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பத்திரங்களைத் தயாரிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
குமார ஜெயக்கொடி 2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது, நிதி முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது சட்டவாளர் மூலம் எழுத்துபூர்வ சமர்ப்பணங்களை சமர்ப்பிக்க அனுமதி கோரியிருந்தார். அதற்கு ஆணைக்குழு அனுமதி அளித்தது.
இதையடுத்து அவரது எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
8 மில்லியன் ரூபா முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அமைச்சர் மற்றும் இரண்டு பேர் மீது மேல்நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
