பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – சிறிலங்கா அதிபர் உறுதி
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாகவும், சர்ச்சைக்குரிய நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதாகவும், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான தனது நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கொலைகள் மற்றும் பாரிய குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
“எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும், மறைக்கப்பட்ட குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
”துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அண்மையில் அதிகரித்திருக்கின்றன. சில காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் உடந்தையாக இருக்கின்றனர்.
நாங்கள் நடவடிக்கை எடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டோம்” என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.
