நிஷா பிஸ்வாலுக்கும் அப்பம் – கொழும்பில் தொடரும் ‘அப்பம்’ இராஜதந்திரம்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தனது நேற்றைய நீண்ட சந்திப்புகளை, இராப்போசன விருந்துடன் நிறைவு செய்ததாக டுவிட்டரில் எழுதியுள்ளார்.
இந்த இராப்போசன விருந்தில் தாம் முதல் முறையாக சிறிலங்கா அப்பத்தை சுவைத்துப் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இராப்போசன விருந்தில் சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் அமர்ந்திருக்கும் ஒளிப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
சிறிலங்காவில் அண்மைக்காலமாக அரசியலில் அப்பம் முக்கிய இடத்தை வகித்து வருகிறது.
தன்னுடன் ஒன்றாக இராப்போசனமாக அப்பம் சாப்பிட்ட, மைத்திரிபால சிறிசேன மறுநாள் காலையில் சொல்லிக் கொள்ளாமல் எதிரணிக்கு ஓடி விட்டதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூட்டங்களில் தெரிவித்து வந்தார்.
அத்துடன் இனிமேல் தாம் யாருக்கும், அப்பம் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.